காணாமற்போன இளைஞன் 5 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமற்போன இளைஞன் 5 நாட்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு சம்பவ தினமான இன்று பகல் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து தடவியல் பிரிவு காவல்துறையினர் சகிதம் சென்று மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த மாதம் 27 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.