ஈரானியர்களுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு!
ஈரான் தனது எதிரிகளை ஏமாற்றமடையச் செய்யவும் தோற்கடிக்கவும் தீவிரமான பொருளாதாரப் போரில் ஈடுபட வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அவர் எழுத்துப்பூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவப் போர்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிரிகளுடனான இராணுவப் போரில் ஈரான் ஏற்கனவே தனது முன்னேற்றத்தையும் மேன்மையையும் உலகிற்கு நிரூபித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இப்போது பொருளாதார மற்றும் கலாச்சார ஜிஹாத் (புனிதப் போர்) களத்திலும் எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் ஈரானியர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் நுகர்வுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று கமேனி கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட வணிகங்களின் உரிமையாளர்கள், நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |