தாய், மகள் படுகொலை - கைதான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதி (இரண்டாவது இணைப்பு)
அங்குருவாத்தோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
24 வயதுடைய பெண்ணும் அவரது 11 மாத கைக்குழந்தையும் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று இரத்மல்கொட காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேக நபர் வரகாபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் கூரிய ஆயுதத்துடன் காவல்துறை உத்தியோகத்தர்களைத் தாக்க முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இறுதியில் அவர் அந்த ஆயுதத்தால் தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த நபர் உயிரிழந்தவரின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தாய், மகள் படுகொலை - முன்னாள் இராணுவவீரர் இன்று அதிகாலை கைது (முதலாம் இணைப்பு)
24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட உறவினரான முன்னாள் இராணுவ வீரர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் .
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று முன்தினம் (20) விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது

சந்தேகநபர் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார். அதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் வரகாகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகநபர் பதுங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமற் போன இளம் தாயும் மகளும் கொலை -காட்டுப்பகுதியில் சடலங்கள் மீட்பு
அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகியோரின் உடல்கள் மற்றும் முகங்கள் அடையாளம் காண முடியாத வகையில் விலங்குகளால் உண்ணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மனைவி,குழந்தையை காணவில்லை

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர். கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லையெனத் தெரிவித்து காவல்துறையில் புகார் செய்தார்.
இதனையடுத்து தேடுதல்வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் குறித்த இருவரது சடலங்களையும் காட்டுப்பகுதியிலிருந்து நேற்றையதினம்(21) கண்டெடுத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் பயன்படுத்திய முகம் துடைக்கும் துணியும் அவரது உடலில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கணவரின் மைத்துனர் (மூத்த சகோதரியின் கணவர்) விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
வீட்டில் பல இடங்களிலும் இரத்தக்கறைகள்

உயிரிழந்த பெண் வசித்த வீட்டின் குளிர்சாதனப்பெட்டியின் கதவில் பல இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும், அருகில் தரையில் பல இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து தொல்லை கொடுப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி தன்னிடம் இரண்டு முறை கூறியதாகவும் கணவர் காவல்துறை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தாயின் உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி இதனை கொலையாக கருதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிசிடிவி காணொளியில் கிடைத்த தகவல்

இதற்கிடையில், காவல்துறையினர் அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அங்கு சிவப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்று வந்து கொண்டிருந்த காட்சியை காவல்துறையினர் அவதானித்துள்ளனர். முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் இருந்து கால் ஒன்று வெளிப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனை ஓட்டிச் சென்றவர் அவரது மைத்துனராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவரை நேற்று (21) பிற்பகல் வரை கைது செய்ய முடியவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.