மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி
மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் நேற்று(15) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.
இளம் குடும்பஸ்தர் பலி
இச்சம்பவமானது வயல் வேலைக்காகச் சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மோதியுள்ளார்.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு வண்டிலின் சக்கரம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் மற்றுமொரு வண்டியின் மாட்டினது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது 12 ஐச் சேர்ந்த ஜமால்தீன் ஹாறூன் (வயது 42) என் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மேலதிக விசாரணை
விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார்.
இதன் பின்னர் மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
விபத்துக் குறித்து நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







