நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய தயாசிறி எம்.பி
தேசிய மக்கள் சக்தியின் எம்.பி சுகத் சில்வாவிடமும் விசேட தேவையுடையவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் விசேட தேவையுடையவரான எம்.பி சுகத் சில்வா தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மன்னிப்பு கோரும் தயாசிறி
சுகத் சில்வா எனது பல்கலைக்கழக சகோதரர். அவருடன் நான் இணக்கமாகவே செயற்பட்டுள்ளேன்.
விசேட தேவையுடையவர்களை அவமதிக்கவோ அல்லது மலினப்படுத்தவோ வேண்டிய நோக்கம் எனக்கு கிடையாது.
வெறுப்புக்களை பரப்புவதற்காக அரசாங்கம் இவரையும் பயன்படுத்திக் கொள்கிறது என்றே கூறினேன்.
இந்த கருத்து சுகத் சில்வாவுக்கு மனவருத்தத்தையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதேபோல் விசேட தேவையுடைய அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
