ரவி கருணாநாயக்க பிணையில் செல்ல அனுமதி
புதிய இணைப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.
வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்
இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |