முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (31) இடம் பெற்றது.
நீதிக்காக குரல்கொடுத்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன.
கொலைகளுக்கு நீதி கோரி தொடர்ச்சியான போராட்டம்
இவற்றில் பெரும்பாலானவை ஜனவரி மாதத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன அந்த வகையில் ஜனவரி மாதத்தை ஊடகவியலாளர்கள் கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றார்கள் குறித்த மாதத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூருகின்ற அதே வேளையில் அவர்களுடைய கொலைகளுக்கு நீதி கோரி தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்

அந்த வகையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இன்று வரை அவர்களுக்கான நீதி கிடைக்காத நிலைமையில் தொடர்ச்சியாகவும் ஊடகவியலாளர்கள் இந்த ஜனவரி மாதத்தை கறுப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றனர்
நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக முல்லைத்தீவு ஊடக அமையத்திலே திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்தியதால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோருடைய நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது

மறைந்த ஊடகவியலாளர்களின் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது
துண்டுப்பிரசுர விநியோகம்
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவு நகரிலும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

குறித்த துண்டுப்பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் எம்மோடு இருந்திருந்தால் இன்று அவருக்கு 56 வயதாகியிருக்கும். ஆனால், வேதனையளிக்கும் விதத்தில் 20 ஆண்டுகளிற்கு முன்னர் அவரது 36 ஆவது அகவையில் அரச கொலையாளிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்கரை நகரான திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டின் இரண்டாவது நாள். ஐந்து மாணவர்கள் எப்படி படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மறுக்க முடியாத புகைப்பட ஆதாரத்துடன் அவர் நிரூபித்ததால் அவர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த மாணவர்கள் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர் என்று இலங்கை அரசு கூச்சமின்றி பச்சைப் பொய் கூறியது (அல்லது உண்மையை மூடி மறைக்கும் வகையில் பச்சைப் பொய் கூறியது).
ஆனால், சுகிர்தராஜன் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனாலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2010 தலைநகரில் அதே ஜனவரி மாதத்தில் கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொட உட்பட பலரும் இதே போன்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.
சுகிர்தராஜனிற்கு முன்னரும் பிறகும் இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததனால் வலிந்து காணமால் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால் அது 50 ஐ எட்டும். அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அதிலும் அதிகளவானாவர்கள் ஜனவரி மாதம் பலியாயினர்.
ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள்
இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் பலவும் இடம்பெற்றன இவையும் அதிகளவில் இதே ஜனவரி மாதத்தில் தான் இடம்பெற்றன இதன் காரணமாக ஜனவரி மாதமே ஊடகவியலாளர்களுக்கு கறுப்பு மாதமாக உள்ளது.

குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது மட்டுமின்றி அவர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுவது. மேலும் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்ட தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எந்த நவடிக்கையும் எடுக்கத் தவறியதால் இன்று முழு நாடும் இருண்டு போயுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்