முள்ளிவாய்க்காலில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்- முறைப்பாட்டை கண்டுகொள்ளாத காவல்துறை!
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் அப்பெண் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியுள்ளது. பாடசாலை பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பெற்றோரை முரண்பட வைத்து தாக்குதலில் முடிந்துள்ளது.
இந்த தாக்குதலில் குமரேசன் யோகேஸ்வரி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் கருத்து தெரிவிக்கையில்,
ஒரே குடும்பத்தினை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் எனது வீடு புகுந்து அடித்து கத்தியாலும் வெட்டியுள்ளார்கள். கதவினை உடைத்துள்ளார்கள். இதன் போது நான் கல்லால் தூக்கி எறிந்தேன் என்னை அடிக்க வந்த ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதன் ஊடாக நான் மருத்துவமனை சென்றுள்ள நிலையில் வீட்டில் எனது கணவன் நான்கு பிள்ளைகளுடன் இருந்த வேளை இரவு நேரம் மண்வெட்டிபிடியால் கணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டினையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடிவாங்கிய எனது கணவனையே கைது செய்ய முயற்சித்துள்ளார்கள்.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றோம் எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காவல்துறையினர் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்கள்.
