தமிழர் தாயகப்பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் காணி ஒன்றில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 15.12.21 அன்று முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சிறுமி இன்று மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சென்று சடலத்தைப் பார்வையிட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
13 வயது சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார். இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே காணப்படுகிறது.
அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே சிறுமியின் சடலத்தினை கணடதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.