இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்த இளைஞருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த நபரை முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதில் முல்லைத்தீவு முள்ளியவளை 02 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 31 வயதுடைய இளைஞனுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து நாகபட்டினம் ஊடாக யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு கடந்த 12.03.21 அன்று சட்டவிரோதமாக படகில் வந்திறங்கியுள்ளார்.
இந்தியாவில் இருந்து மூவர் படகுமூலம் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டிற்குள் வருகைதந்த நபர் வவுனியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில் தகவலறிந்த பொலிசார் தேடுதல் மேற்கொண்டபோது 10.06.21 அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவரை முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா அவர்களிடம் முன்னிலைப்படுத்தியபோது குறித்த நபரை 5 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 25.11.21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.