தாயகப்பகுதி கிராமத்திற்குள் இராணுவ சீருடை அணிந்தவர்களால் அரங்கேறிய கொடூரத்தின் உணர்வெழுச்சி நாள்!
முல்லைத்தீவு - ஒதியமலை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.
இந்த படுகொலை இடம்பெற்று சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலைமை நீடிக்கின்றமை குறித்து தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற எல்லை கிராமத்தில் சிறிலங்கா இராணுவ சீருடை அணிந்தவர்கள் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வீடுகளில் இருந்து ஆண்களை மாத்திரம் தனியாக அழைத்துச் சென்று சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.
அரங்கேறிய கொடூரம்

பதவிய இராணுவ முகாமில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒதியமலை கிராமத்திற்குள் புகுந்த சுமார் 30 பேர் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அஞ்சலிக் கூட்டம்

அதனையடுத்து அஞ்சலிக்கூட்டமொன்றும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கனகையா தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக உறவினர்களுக்கு முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










