முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்ட பகுதி- தீவிர விசாரணையில் பொலிஸார்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸாரை அழைத்த ஊடகவியலாளர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோது பொலிஸாருக்கு சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தெரியாது என தெரிவித்துள்ளனர்
அதனையடுத்து சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள மணலை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த முல்லைத்தீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள் அயலவர்களிடம் சட்டவிரோத மணல் குவிப்பை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றை நாடி உரிய திணைக்களங்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.