சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி)
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி மக்களால் முற்றுகைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் மீனவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று காலை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக வாயிலை மூடி அதிகாரிகளை உள்ளே செல்ல விடாது போராட்டம் இடம்பெற்று வருகிறது.
சட்ட விரோத மீன்பிடி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத போதும் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். அந்த நிலைமையையாவது காப்பாற்றுங்கள் என அடையாளப்படுத்தி குறித்த போராட்டத்தில் கஞ்சி காச்சி பரிமாறப்பட்டது.
சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையானவர்கள் தேவையில்லை
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தி போராடி வருகின்றனர்.