குளம் அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய காடழிப்பும் மண் அகழ்வும் - மக்கள் கடும் எதிர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அம்பலவன் சின்னக்குளத்தின் அலைகரை பகுதியில் குளத்தினை ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி பாரியளவில் காடு அழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு கிரவல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த விடையம் தொடர்பில் கிராம பொது அமைப்புக்களால் பல்வேறு உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தியும் துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கடந்த மூன்று கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு இந்த அனுமதியினை வழங்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டும் இவற்றையும் மீறி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு கடந்த வருடம் பல்லாயிரக்கணக்கான கியூப் கிறவல் அகழ்ந்து சென்றபோதும் அவர்கள் தெரிவித்தது போல் எந்த வேலைத்திட்டமும் செய்யாது மீண்டும் இவ்வருடம் குறித்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து கடந்த பத்து நாட்களாக பாரிய காடழிப்பும் கிரவல் அகழ்வும் இடம்பெற்று வருகின்றது.
இன்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிப்பத்திரத்தினை முறைகேடாக பயன்படுத்தி கிரவல் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு இன்று ஊடகங்கள் சென்றபோது கிரவல் அகழ்வாளர்கள் அகழும் இயந்திரத்தினை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் படையினர் பிரசன்னமாகி இருந்தவேளை படையினரால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல டிப்பர் வாகனங்கள் தப்பிச்சென்றுள்ளன. சம்பவத்தினை தொடர்ந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் குறித்த பகுதிக்கு விரைந்த ஐயன்கன்குளம் பொலிசார் கிரவல் அகழ்வு காரர்களின் அனுமதி தொடர்பிலோ இடம்பெற்ற காடழிப்புக்கள் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாது மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த விடயம் குறித்து தீர்மானம் எடுக்கும் வரை அகழ்வு பணிகளை நிறுத்துமாறு அந்த பகுதியில் நின்ற கனரக இயந்திரத்தையும் டிப்பர் வாகனங்களையும் அங்கிருந்து செல்வதற்கு அனுமதித்துள்ளார்கள்.
குறித்த நபர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை தாண்டி காடழிப்பு செய்து கிரவல் அகழ்வு இடம்பெற்ற போதும் பொலிசார் இவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் பின்னர் வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதியை வந்து பார்வையிட்னர் இருப்பினும் குறித்த பகுதி தொடர்பில் தாம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்து சென்றுள்ளனர்
இவ்வாறு சடடவிரோதமாக இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் பொலிசாரோ வனவள திணைக்களத்தினரோ நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றி விட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க அல்லது தட்டிக்கேட்க முனையும் கிராம மக்களை பொலிசார், இராணுவத்தினர் ஆயுதமுனையில் வீடுகளுக்கு சென்று மிரட்டுவதாகவும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
இதேவேளை இன்று பொலிசார் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்காமையானது அதனை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது குறித்த கிராமத்துக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெறும் இவ்வாறான காடழிப்பு தமது சூழல் பாதிப்பு தமக்கு வேண்டாம் எனவும் குறித்த கிரவல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறும் மக்கள் கோரியுள்ளனர் குறித்த பகுதியில் வெட்டப்படும் கிரவல்கள் சட்டவிரோதமாக வீதியோரத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் களஞ்சியப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது