யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று (17) காலை 9:30 மணியளவில் உணர்வு ரீதியாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் செம்பியன்பற்று பங்குத்தந்தையால் விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
பொது ஈகைச் சுடர்
இந்த நிகழ்வில் இறுதிப்போரில் தனது தந்தையையும் மகனையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும்அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலர் அஞ்சலி இடம்பெற்ற பின்னர் தமிழினப் படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சியும் வழங்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள், புலம்பெயர் மக்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் ஊடகவியலாளர் காண்டீபன, குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் - பூ.லின்ரன்
அம்பனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியிலும் அப்பிரதேச இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வாழ்ங்கல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பன் கொட்டோடை சந்தியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை குடத்தனை வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தராஜா சுரேஷ்குமார், மாவீரர்களின் உறவுகளான த. இன்பராசா, ம.ஜெயந்திமலர், மயில்வாகனம் உட்பட அனைவரும் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தனர்.
பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைக்க மலர் அஞ்சலி செலுத்தியத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவாக உப்பு கஞ்சியும் வழங்கப்பட்டது.
செய்திகள் - காண்டீபன்
மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று (16.05.2026) காலை 9.00க்கு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் சந்தை வர்த்தகர்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.

செய்திகள் - த. பிரதீபன் , பு.கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |