மட்டக்களப்பு - கிழக்குப் பல்கலை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்வை மிக உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மலரஞ்சலி
இதன்போது, நினைவுத்தூபியில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கு குழுமியிருந்தவர்கள் நினைவுத்தூபிக்குச் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






