வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள்
🛑 புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13-05-2026), யாழ். தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்தோடு, அல்லைப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பங்கேற்றவர்கள் காய்ச்சிய கஞ்சியைச் சிரட்டையில் குடித்து, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Thampithurai Piratheepan



🛑 இரண்டாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, வடமராட்சி மந்திகை சந்தைப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன.
இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகப் பொது ஈகைச் சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க மலர் அஞ்சலியைச் சோமஸ்கந்த குருக்கள் மற்றும் தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மக்களால் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்புக் கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
🛑 செய்திகள் - Khandeepan Thangarajah



🛑 முதலாம் இணைப்பு
இறுதி யுத்தத்தில் குடித்து உயிர்வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் குருநகரில் இன்று (13-05-2026) காலை முன்னெடுக்கப்பட்டது.
மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவுத்தூபியின் முன்பாக கஞ்சி காய்ச்சப்பட்டு வழங்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் உப்பில்லாது காய்ச்சிய கஞ்சியைப் போன்று காய்ச்சப்பட்டுச் சிரட்டையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது குருநகர் பங்குத்தந்தை றொக்ஸ், பாடசாலைச் சிறுவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் குடித்து இறுதி யுத்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Thampithurai Piratheepan
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






