வெலிகம பிரதேசசபை தலைவர் பாதாள உலக குற்றவாளி: அம்பலப்படுத்திய அரசாங்கம்!
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை, குற்றவாளிகளுக்கு இடையிலான மோதலின் விளைவு என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் இன்று (22.10.2025) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மக்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் சமூகத்தில் சட்டத்தை மதிக்கும் வகையில் செயல்பட்டால், இதுபோன்ற விடயங்கள் நடக்காது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள உலகத்துடன் தொடர்பு
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "இன்று காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளனர். அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. இன்றைய சம்பவத்தைப் பற்றி நாம் பேசினால், வெலிகம தலைவர் ஒரு பொது பிரதிநிதி எனினும், அவர் ஒரு பாதாள உலக குற்றவாளி.
அவருக்கு 6 வழக்குகள் உள்ளன. மாத்தறை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. குருநாகல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. காலி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் உள்ளார். பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்போது, இந்தோனேசியாவிலிருந்து பல குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமசேகரவிடம் ஆயுதங்கள் இருப்பதாக அவர்களின் அறிக்கைகள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகள் தீவிரம்
இது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் சம்பாதித்ததாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது.
ஒரு பாதாள உலகத்தின் அல்லது வேறு யாருடைய மரணமோ அங்கீகரிக்கப்படவில்லை. மனித உயிரை மதிக்கும் ஒரு அரசாங்கம் தற்போது உள்ளது.
எனினும், இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் தொடர்பான விசாரணைகள் மூலம் அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் என்பதற்கு போதுமான தகவல்கள் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
