தாயகத்தின் மீது திடீர் கரிசனை - மனம் மாறினாரா முருத்தெட்டுவே ஆனந்த தேரர்?
வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே எனவும் அவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படக்கூடாது எனவும், கொழும்பு அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பின் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்தாது, இலங்கையர் என்ற உணர்வுடன் பயணிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் விரும்புகின்றனர் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னை சந்தித்தித்தபோது , தமிழ் மக்களின் குறைபாடுகளை நீக்கி சகலரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுபப வேண்டும் என்பதை தாம் விரும்புவதாக குறிப்பிட்டார்.
அவர் இந்த நாட்டை நேசிக்கின்றார் என்பது எமக்கு தெரியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எம் அனைரினதும் நோக்கமாக உள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய தமிழ் தலைவர்கள் உள்ளனர்.
முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். ஆனால் இனவாத அரசியல் கொள்கையில் அதனைச் செய்ய முடியாது. இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தான் இந்த நாட்டின் சாபக்கேடு. மறைந்த மாதுலுவாவே சோபித தேரரும் அதனையே தொடர்ச்சியாக கூறிவந்தார்.
ஒரு நபருக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்தால் நாடு நாசமாகும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இன்றும் உள்ளோம். ஒருவருக்கு கொடுக்கும் சகல அதிகாரங்களையும் கொடுக்காது நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.
அதேபோல், வெளிநாட்டு தலையீடுகள் இல்லாது, எமது நாட்டுக்கென்று புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒரு நபரை இலக்காக வைத்து அதிகாரங்களை பலப்படுத்தவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகாரத்தை கொடுக்கவோ தீர்மானிக்காது, முழு நாட்டுக்குமான அரசியல் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.
சகல மதங்களையும் பிரதிநிதித்துவப் படும் விதமாக சகல மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.