தாக்குதலுக்கு முன் நீர்கொழும்பு தேவாலயங்களின் தகவல்களை சேகரித்த முஸ்லிம்கள்! பின்னணியில் சலே
ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்ட போக்குகள் குறித்தும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேவின் விசாரணை தொடர்பிலும் அரசியல் களத்தில் பல விவாதங்கள் உறுவெடுத்துள்ளன.
ஆளும் தரப்பு விசாரணையில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்கபோவதில்லை என சபதம் செய்துள்ள நிலையில் எதிர் தரப்பின் சில எம்.பிக்களும் அரசியல்வாதிகளும் இதனை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக சலேவின் விடுதலையை இலக்காக கொண்ட நகர்வுகளும், கோரிக்கைகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட எம்.பிக்களின் தலைமையில் இடம்பெறுகிறது.
பகிரங்க கருத்து
இது இவ்வாறிருக்க நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பொதுபாதுகாப்பு அமைச்சர் விசாரணை தொடர்பில் பரப்பப்படும் பொய்களை உடைத்தெறிய வேண்டும் என கூறி விசாரணையில் வெளிவந்த சில விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த கருத்துக்களில் தாக்குதல் குழுவின் திட்டங்களுக்கு சலே எவ்வாறு உதவினார் என்பதும் அம்பலப்படுத்தப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர்,
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநரும், அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநருமான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலே, இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளை வியூகம் வகுத்துச் சதித்திட்டம் தீட்டும்படி இயக்கியுள்ளார் என்று நம்புவதற்குப் போதுமான பின்வரும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியத் தகவல்களைச் சேகரித்தல்
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, நீர்கொழும்புப் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெற்ற ஆராதனைகளில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைச் சேகரிக்குமாறு அவர் நான்கு முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணுதல்
இந்தத் தகவல்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்ட நபர்களில் ஒருவரான தலைவரின் புகைப்படம், குற்றப் பதிவேடுகள் பிரிவில் (CRD) உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் புகைப்படங்களுக்கு மத்தியில் ஒரு சாட்சியால் அடையாளம் காணப்பட்டது. அந்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்பதும், தாக்குதலுக்குப் பிறகு அவர் தலைமறைவாக உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உளவுத் தகவலைப் புறக்கணித்தல்
பானதுரையில் வசிக்கும் இராணுவ உளவுத்துறை உளவாளி ஒருவர், சஹாரன் ஹாஷிம் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தபோதிலும், அதை உளவாளி புறக்கணித்ததால் தாக்குதல் நடைபெற வழிவகுத்தது.
மறைக்கப்படும் கைபேசி தரவுகள்
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, சந்தேக நபர் விசாரணைக்கு எந்தவொரு சாதகமான உதவியையும் வழங்கவில்லை. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசி மற்றும் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் கூட விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க அவர் இதுவரை மறுத்துவிட்டார்.

அவர் எவ்வளவுதான் உண்மைகளை மறைக்க முயன்றாலும், இதுவரை பெறப்பட்ட அனைத்து அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொலைபேசித் தரவுகளின் மூலம் இந்தச் சதியில் அவரது நேரடித் தொடர்பு நன்கு நிறுவப்பட்டுள்ளது” என்றார்.
இந்த உரையில் அவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், அதன் பின் சலேவின் நடவடிக்கைகளின் மாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.
இந்த விசாரணையின் சிக்கலான தன்மை, சர்ச்சைக்குரிய தன்மை மற்றும் அதன் நுட்பமான தன்மை காரணமாக, இந்த நேரத்தில் அனைத்து உண்மைகளையும் என்னால் வெளியிட இயலவில்லை எனவும் கூறினார்.
இருப்பினும், நாங்கள் விசாரணையைத் தொடர்வோம் என்றும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவோம் என்றும் இந்த மாண்புமிகு அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 20 மணி நேரம் முன்