ரணிலின் வெற்றியை விருந்துபசாரத்துடன் கொண்டாடி தீர்த்த நாமல்..!
சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாபெரும் விருந்து ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகியமையடுத்து கடந்த 20 ஆம் திகதி புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இடம்பெற்றது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.
நாமலின் அழைப்பு
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை கொண்டாடும் முகமாக அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விருந்துபசாரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
137 உறுப்பினர்களின் பங்கெடுப்பு
அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் நாமலின் அழைப்பை ஏற்று மொட்டுக்கட்சியின் 137 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்த மொட்டு கட்சியின் பிரேம்நாத் தொலவத்தவும் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.