தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியே தேசிய மக்கள் சக்தி - கே. டி. லால் காந்த விடாப்பிடி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கூட்டணி அமைக்காதென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சி உள்ளிட்ட சில கட்சிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற அழைப்பை தேசிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் இவ்வாறான நிலையில் உள்ள கட்சிகளுடன் தமது கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல கட்சிகள் பேச்சுவார்த்தை
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் அண்மை நாட்களில் தமது கட்சியினருடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எந்தவொரு கட்சியுடனும் தேசிய மக்கள் சக்தி இணைந்து செயல்படாதெனவும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத புதிய கூட்டணி
இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸை ஆதரிக்காத புதியதொரு கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.
அத்துடன், இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஏனைய அரசியல் கட்சிகளுடன் தமது கட்சி முன்னெடுத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.