கூண்டோடு நடக்கும் கைதுகளால் பலருக்கு உதறல் - நகையாடும் NPP அமைச்சர்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில ஒன்றிணைவுகள் அச்சம் காரணமாகவே ஏற்படுகின்றன.
கூண்டோடு கைது
பாதாளக் குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை இந்தோனேசியாவில் வைத்து நாங்கள் கைது செய்த போது, அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கவில்லை.
மாறாக, கைது பயத்தில் 'பெக்கோ சமன்' என்பவரின் வீட்டுக்குச் சென்று ஒளிந்திருந்தனர். இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு காவல்துறையினரால் முடிந்தது.
அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம் தான் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூட வைத்தது. அவ்வாறு தான் எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஓரணியில் எதிர்க்கட்சியினர்
அந்த அச்சத்தால் தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு ஒடுக்க வேண்டிய நோக்கமும் - தேவையும் எமக்கில்லை.
ஆனால், எத்தனை தரப்புகள் ஒன்றாக இணைந்தாலும், சட்டம் நடைமுறையாகியே தீரும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
