நெருப்புடன் விளையாட்டு..! சீன - விரோத கூட்டணிக்குள் இந்தியா - ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் யுத்தத்தில் அமெரிக்காவும் நேட்டோவும் பங்கெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, தமது செல்வாக்கை சீர்குலைப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளது.
ரஷ்ய - எதிர்ப்பு மற்றும் சீன - விரோத கூட்டணிக்குள் இந்தியாவையும் இழுத்து விடுவதற்கு நேட்டோ முயற்சிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுக்கு அருகில் பதட்டங்கள்
ரஷ்யாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவுக்கு அருகில் பதட்டங்களை நேட்டோ ஆரம்பிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோ குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனில் மேற்கொண்டதை போன்று தென் சீனக் கடற்பரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த நேட்டோ முயற்சித்துவருவதாக அவர் கூறியுள்ளார்.
தாய்வான் மற்றும் தாய்வான் நீரிணைப் பகுதியை நேரடியாக கூறாத போதிலும் இவ்வாறான ஆத்திரமூட்டல் செயற்பாடுகளை சீனா எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கின்றது என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் சேர்ஜி லவ்ரோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிராந்தியங்களில் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலையும் அபாயங்களையும் விடுக்கும் நேட்டோவின் நடவடிக்கைகள் மூலம் நெருப்புடன் நேட்டோ விளையாடுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா - சீனா இராணுவ ஒத்துழைப்பு
தென் சீனக் கடற்பரப்பு என்பது, சீனாவை போன்று தமது நாட்டிற்கு அண்மையிலும் அமைந்துள்ளதாகவும் அதனாலேயே ரஷ்யா சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வளர்த்து, கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது எனவும் சேர்ஜி லவ்ரோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தலைமையின் கீழ் உள்ள நேட்டோ உறுப்பினர்கள் ஐரோப்பாவை அடுத்து கொந்தளிப்பான நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.