இலங்கையிலுள்ள 90,000 நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லையாம் - துறைசார் மேற்பார்வைக் குழு தகவல்
இலங்கையிலுள்ள நிறுவனங்களில் ஏறத்தாழ 90,000 நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லை என தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
"இலங்கையில் மொத்தமாக காணப்படும் 105,000 நிறுவனங்களில், நிறுவனங்களுக்குரிய வரிக்கடமைகளை 15,000 நிறுவனங்கள் மட்டுமே நிறைவேற்றுகின்றன" என்று குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
அதிபர் செயலகத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த

தனிநபர் வரிக் கோப்புகலின் எண்ணிக்கை சென்ற ஆண்டு (2022) 295,000 ஆக இருந்ததாகவும் இந்த ஆண்டில் (2023) இந்த எண்ணிக்கை 204,000 கோப்புகளாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“மக்களில் 29,000 பேர் அவர்களின் தனிப்பட்ட கோப்புகள் மூலம் நாட்டின் வரி வளங்களுக்கு பங்களிக்கின்றனர் அதேவேளை, நம் நாட்டில் 105,000 பெரு நிறுவன நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் 15,000 நிறுவனங்கள் மாத்திரமே தங்கள் வரிக் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுகின்றன," என்று அவர் கூறினார்.
இந்த புள்ளிவிவரங்கள் நாட்டின் வரி வசூல் கட்டமைப்பிற்குள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்துவதன் மூலம் வருவாய் சேகரிப்பை நெறிப்படுத்தவும், உள்நாட்டு வருவாய் கட்டளைச் சட்டத்தை சீர்திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன," என்றும் இந்த வேளையிலே அவர் கூறினார்.