நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா
புதிய இணைப்பு
நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி "ஆகஸ்ட் 26-ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பலர் உயிரிழந்ததுடன் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
மீண்டும் வெள்ளப்பெருக்கு
இதேவேளை, வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.
நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஏரியில் சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.
காணாமல் போயுள்ளனர்
நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேபாளம் மற்றும் சீனாவில் 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், நேபாளத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்
இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.