'ரிக்டொக்' பயன்பாட்டு நேரத்துக்கு கட்டுப்பாடு
18 வயதிற்குட்பட்டவர்கள் ரிக்டொக் செயலியை ஒரு மணிநேரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான புதிய கட்டுப்பாட்டை கொண்டுவரப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பதின்ம வயதினர் நீண்டநேரம் இந்தச் செயலியை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை வரவுள்ளது.
60 நிமிட திரைநேர வரம்பு
இளைய தலைமுறை பயனாளிகளின் டிஜிற்றல் எனப்படும் எண்ணியல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் வரவுள்ளதாக ரிக்டொக் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தினால் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளின் ரிக்டொக் திரைநேர கணக்குகள் தினசரி ஒரு மணிநேரம் என வரம்புக்குள் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் ரிக்டொக் போன்ற செயலிகளால் இளையோர் ஈர்க்கபடுவது பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் வரவுள்ள இந்த மாற்றத்தின் படி ரிக்டொக் திரைநேரத்தில் 60 நிமிட வரம்பை அடைந்தவுடன் பயனாளிகள் தமக்குரிய கடவுக்குறியீட்டை உள்ளிடும்படி கோரப்படும் போது குறித்த பயனாளி 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்குரிய பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.
இளம் பயனர்கள் மீதான தாக்கம்
சமூக ஊடக தளங்கள் இளம் பயனர்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்ரகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட ஏனைய தளங்களும் இதேபோன்ற புதிய கட்டுப்பாடுகளை இளைய பயனாளிகளை முன்வைத்து எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
