குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்
வீடமைப்பு வசதிகளை மேம்படுத்தி குறைந்த வருமானக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் வீட்டுவசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 31,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
இது குறித்து வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுனில் ரனசிங்க தெரிவித்ததாவது, “இந்தத் திட்டத்தில் ஆறு அமைச்சுகள் இணைந்து செயல்படுகின்றன.
இதில் 25,000 வீடுகள் குறைந்த வருமானக் குடும்பங்களை இலக்காகக் கொண்ட நேரடி உதவி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.”
ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு
வீட்டு உதவி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு நிர்மாணிக்க ரூ. 10 இலட்சம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் ஜனவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் ஜனவரி 28 அன்று காலியில் பிரதமரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டது.
1,500 வீடுகள்
இந்த நிலையில், பெப்ரவரி 25 ஆம் திகதி 13 மாவட்டங்களில் 1,500 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 1.5 பில்லியன் நிதி வழங்கப்பட்டு 1,500 வீடுகள் நிர்மாணிக்க உதவி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்ட பணப்பரிவர்த்தனைகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 குடும்பங்களுக்கு உதவி வழங்கும் இலக்கு 2026 நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |