புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற இரண்டாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிலேயே, உறுப்பு நாடுகளுக்கிடையிலான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை உருவாக்குவதற்கான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2022 மார்ச் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்பட்டது.
புரவலர் நாடான இலங்கை
இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், பிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துக்களை நிர்வகித்தல் உள்ளிட்ட துறைகளில் ஆதரவு வழங்கும் கட்டமைப்பாக செயல்படும்.

ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ், புரவலர் நாடான இலங்கை, அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.
இந்நிலையில் தேவையான நிறுவன ஒப்புதல்கள் மற்றும் சட்ட அனுமதிகளை உள்ளடக்கி, ஒரு வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
நிபுணத்துவப் பரிமாற்றம்
இலங்கையில் இந்த வசதி அமைக்கப்படுவது, இந்தியா உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அணுகுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவக்கூடும்.
இலங்கை புரவலர் நாடாக செயற்படும் நிலையில், அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் தனியான உடன்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.
இந்த முன்னெடுப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் தொடங்கிய பிம்ஸ்டெக் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சி, கொழும்பை பிராந்திய தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றும் புதிய கட்டத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |