ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!
சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலன் (Container) ஒன்று தொடர்பிலேயே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது பரிசோதனை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறித்த கொள்கலனுக்குத் தேவையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாததால், அது சுங்கத் திணைக்களத்தின் சிவப்புக் சனல் (Red Channel) ஊடாகப் பரிசோதிக்கப்பட்டது.

முதலாம் குழு அதில் தவறேதும் இல்லை எனக் கூறிய போதிலும் அன்றைய காலத்தில் சுங்க மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான இரண்டாவது குழு அதனை மீண்டும் பரிசோதித்தது.
இரண்டாவது பரிசோதனையின் போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 7 வாகன ஆசனங்கள் மட்டுமே இருந்ததாகக் கூறி, அவற்றை மட்டும் அரசுடமையாக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
உள்நாட்டு விசாரணை
சுங்கத் திணைக்களத்தின் உள்நாட்டு விசாரணைப் பிரிவினர் நடத்திய மூன்றாவது பரிசோதனையில், சுங்கத்திற்கு அறிவிக்கப்படாத 45 வகையான 600 க்கும் மேற்பட்ட பொருட்கள் அக்கொள்கலனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
அதில் 130 வாகன ஆசனங்கள் மற்றும் பெருமளவிலான டயர்கள் இருந்ததாக சானக்க வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பாரதூரமான ஊழல் தொடர்பான அறிக்கைகள் தற்போது சுங்கத் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆனால் தன்னிடம் அந்த ஆவணங்களின் பிரதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்வரும் புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15