பிரான்சில் விலைவாசியேற்றத்தை தடுக்க புதிய சட்டம்
பிரான்சில் மக்களின் பொருளாதார நெருக்கடிகளை மையப்படுத்திய ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர, புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய பலத்தை கொண்டுள்ள இடதுசாரி அணி முயற்சிகளை எடுத்துள்ளது.
இந்தப் புதிய சட்டமூலம் அடுத்தவாரமே நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என இடதுசாரி மற்றும் பசுமைக்கூட்டணியான நுப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பிரான்சில் விலைவாசியேற்றத்தை தடுக்க புதிய சட்டம்
பிரெஞ்சு மக்களிடம் முன்னுரிமையாக உள்ள பிரச்சினையில் முன்னேற விரும்பும் இடதுசாரி அணி குடும்பங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒரு புதிய சட்டமூலத்தை அரசாங்கத்திடம் முன்மொழியவுள்ளது.
இதனை ஒரு சமூக அவசர சட்டமாக கொண்டுவர விரும்பும் அந்த அணி குறித்த சட்டமூலத்தில், நாட்டில் எரிபொருள் மற்றும் எரிசக்தி கட்டணங்களை மேலும் உயரவிடாமல் முடக்குவது, நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை 1500 யூரோக்களாக உயர்த்துவது, மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகைகளை உயர்த்துவதை தடுப்பது ஆகிய முக்கிய விடயங்கள் உட்பட்ட சில விடயங்கள் இருக்கும் என இடது சாரி அணி குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயங்களை தாம் அரசாங்கத்துக்கு முன்மொழிந்து அதனை சட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், இடது சாரிய அணியில் உள்ள கட்சித்தலைவர்கள் இந்த பொது சட்ட முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இமானுவல் மக்ரன் தரப்புக்கு புதிய அழுத்தம்
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த அரசதலைவர் இமானுவல் மக்ரனின் அணி கடந்தவார இறுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், எதிரணிகள் இந்த சட்ட முன்மொழிவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.