தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதம்
தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், அதனை மீளாய்வு செய்து இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதற்கு காலம் எடுக்கும் என்பதால், இந்த தாமதம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம்
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கடந்த மாதம் அரசியலமைப்பு சபை கோரியது.
அந்த வகையில் சுயாதீன ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தகுதியுடைய உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் விண்ணப்பங்கள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் கடந்த வாரத்திற்குள் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இதுவரை சுமார் 2,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள் நியமனம்
அத்துடன் தகுதியற்ற நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்களில் உறுப்பினர்களாக நியமனம் பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பதனால் தெரிவுச் செயற்பாடுகள் சிக்கலானதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு சபையும் மீண்டும் அமைக்கப்பட்டது.
இதன்படி, சுயாதீன ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை சபை நியமிக்க வேண்டும் என்பதுடன், நியமனம் முடியும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் இடைக்கால அடிப்படையில் செயற்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
