லண்டன் 'எலிசபெத் லைன்' தொடருந்து சேவை ஆரம்பம்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஏறக்குறைய 19 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியில் நிர்மானிக்கப்பட்ட எலிசபெத் லைன் என்ற புதிய தொடருந்து வழித்தடத்தின் முதற்கட்டம் இன்றுமுதல் பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மஹாராணி எலிசபெத்தின் முடியாட்சியின் பவள விழா ஆண்டில் அவரது பெயரில் இந்த வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறஸ் ரயில் இல்லையென்றால் குறுக்கு தொடருந்து என்ற செயற்திட்டத்தின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எலிசபெத் லைனின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் வழித்தடம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக செலவினத்தால் தற்போது ஏறக்குறைய 19 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் முதலாம் கட்டமே சேவைகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தின் முதலாவது பயணிகள் தொடருந்து இன்று காலை 6.30இற்கு தென்கிழக்கு லண்டனில் உள்ள படிங்ரன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வரை இருந்த நிலவரப்படி சிலமணிநேரங்களில் இந்த தடத்தில் 130,000இற்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொண்டாட்டமான நிலை இருப்பதாக குறிப்பிட்டுள்ள லண்டன் முதல்வர் சாதிக் கான், இந்த புத்தம்புதிய தொடருந்தில் ஏறியபோது, கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு சிறுவனுக்கு ஏற்பட்ட உற்சாகம் தனக்கும் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
லண்டன் முதல்வரை போலவே ஆயிரக்கணக்காக தொடருந்து பயணப்பிரியர்களும் முதல்நாள் பயண அனுபவத்தை பெற நீண்ட வரிசைகளில் நின்று பயணத்தை செய்ய ஆர்வப்பட்டிருந்தனர்.
இன்று இரவுவரை இந்த வழித்தடம் பரபரப்பாக இருந்தது. வருடாந்தம் 200 மில்லியன் பயணிகள் எலிசபெத் வழித்தடத்தில் பயணிப்பார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.