சிறிலங்காவில் அறிமுகமாகவுள்ள புதிய வரி..! அநுரகுமார எதிர்ப்பு
சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை தாம் எதிர்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மக்கள் மீது திணிக்க பட்டிருக்கும் சுமை மேலும் அதிகரிக்கும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கும் வட் எனப்படும் பெறுமதிசேர் வரி 20 வீதமாக அதிகரிக்கப்படும்.
இலங்கையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் மீது திணிக்க பட்டிருக்கும் சுமை மேலும் அதிகரிக்கப்படும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின் படி பெறுமதிசேர் வரிகள் அதிகரிக்கப்பட்டு இன்று தொலைபேசி கட்டணம் உட்பட அனைத்தினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன் மொழியப்பட்ட பெறுமதிசேர் வரியின் பிரகாரம் மக்களிடமிருந்து மேலதிகமாக 2.5 வீதமான வரியை வசூலிக்க சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, விநியோகம் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையில் வரிகள் அதிகரிப்பது தற்போது ஒரு தொடர் சங்கிலியாக நடைபெற்று வருகிறது. மக்கள் சுமைகளை சுமக்க முடியாது இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் இன்னுமொறு வரி திட்டம் நடைமுறைபடுத்தப்படுவது மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும்.
இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது வரிகளை அதிகரிப்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது", எனக் குறிப்பிட்டார்.