பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! இறுதிக்கட்ட பரபரப்பு
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பு நாளை திங்கட்கிழமை (5) இலங்கை, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு வரவுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்ற இறுதிக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்பின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், கட்சிக்குள் நம்பிக்கையைப் பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் நபர், நாடு சந்தித்துவரும் அனைத்து சவால்களையும் எதிா்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரா என்பதற்கு காலமே பதிலுரைக்கும் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த பிரதமர் யார்
கொவிட் தொற்று தீவிரடைந்த காலத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி, பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சன், கேளிக்கை விருந்து நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அது நாட்டில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பலைகள் எழுந்தன.
அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பொறிஸ் ஜோன்சன் மீது அதிருப்தி தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்தனர். உட்கட்சியிலேயே கடும் அதிருப்தி எழுந்ததால், பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் பொறிஸ் ஜோன்சன்.
அதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்பார்.
பிரதமர் போட்டி
பிரதமர் போட்டிக்குள் பலர் நுழைந்த நிலையில், இறுதிச்சுற்றில் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் நுழைந்ததில் இருந்தே, அவருக்கு ஆதரவு அலை வீசியது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் ஆரம்பகட்ட வாக்கெடுப்புகளில் அவர் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தார். அந்தச் சுற்றுகள் நிறைவடைந்து கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறை தொடங்கியது.
சுமாா் 1.60 லட்சம் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இருவரில் கட்சித் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவியேற்கப் போகிறவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
திடீரென பெருகிய லிஸ் ட்ரஸுக்கான ஆதரவு
தேர்தலுக்கான பிரசாரமும் அனல்பறந்த நிலையில், அந்த நிலைமை படிப்படியாக மாறியது. அவரை எதிா்த்துக் களம் கண்ட லிஸ் ட்ரஸுக்கான ஆதரவு பின் பெருகியது.
தற்போதைய சூழலில் அவரே கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் தோ்ந்தெடுக்கப்படுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
லிஸ் ட்ரஸின் முன்னிலைக்கு பொறிஸ் ஜோன்சனின் ஆதரவாளா்கள் முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறாா்கள். ஏனெனில், முதன் முதலில் இராஜினாமா செய்து பொறிஸ் ஜோன்சனின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் ரிஷி சுனக் தான்.
பிரதமா் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என கட்சி உறுப்பினர்களிடம் பொறிஸ் ஜோன்சனும் கோரியிருந்தார்.
அவரது கடும் எதிர்ப்பு, ரிஷி சுனக்குக்கான ஆதரவைப் பெருமளவில் குறைத்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.