அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் : சர்ச்சையை கிளப்பும் சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் மாறாக கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் (Bimal Rathnayake) X தள பதிவை மேற்கோள்காட்டி சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, குறித்த நபருக்கான பயண அனுமதிப்பத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதுடன், அது இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
அவ்வாறிருக்கையில் அந்நபரைக் கைதுசெய்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள், இதுபற்றி ஏன் ஆராயவில்லை.
மாறாக அவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது ஏன்?' என கேள்வியெழுப்பியுள்ளார்.
அகதிகள் தொடர்பான கொள்கை
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (01.06.2025) தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வைத்துள்ள அவர், “அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியமைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதைப் பெரிதும் வரவேற்பதாகவும், இருப்பினும் இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Change of policy is most welcome. There’s no necessity to change the law. All that is required is a policy directive that a person who returns under the ‘voluntary repatriation scheme’ of the UNHCR will not be arrested or prosecuted but is welcomed warmly! https://t.co/dT5HNcyLsV
— M A Sumanthiran (@MASumanthiran) June 2, 2025
'ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் 'தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்' கீழ் நாடு திரும்பும் நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள்.
மாறாக அவர்கள் நாட்டுக்குள் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கைசார் அறிவுறுத்தல் மாத்திரமே அவசியமாக இருக்கின்றது' என்றும் சுமந்திரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
