வெளிநாட்டு பயணங்களுக்கு அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
பெப்ரவரி 17 ஆம் திகதி தொடங்கும் ஒரு மாத கால பட்ஜெட் விவாத காலத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க(N S Kumanayake) அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் முதல் பட்ஜெட்
நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் முதல் பட்ஜெட்டை பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார், அதே நேரத்தில் ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்பு விவாதங்கள் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடங்கி மார்ச் 21 வரை தொடரும்.
பட்ஜெட் காலத்தில் அமைச்சர்கள் எந்தவொரு உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், தேவைப்பட்டால், வெளிநாட்டு விவகார அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் சிறப்பு சந்தர்ப்பங்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
அரச அதிகாரிகளுக்கும் தடை
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் துறைகளின் தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் அத்தியாவசிய தேவை கருதிய வெளிநாட்டு பயணங்களைத் தவிர வேறு வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, விவாதத்தின் குழுநிலையின் போது மூத்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தில் இருப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் (ஒதுக்கீட்டு சட்டமூலம்) பெப்ரவரி 18 ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 25 ஆம் திகதி வரை தொடரும். பட்ஜெட்டின் குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கி மார்ச் 21 வரை தொடரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |