QR முறையில் விநியோகிக்க எரிபொருள் பற்றாக்குறையே பாரிய பிரச்சினை
ஒரு வார காலத்திற்குள் வரிசைக்கு முடிவு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக தொடரும் பட்சத்தில் அனைத்து வரிசைகளையும் ஒரு வார காலத்திற்குள் முடித்துவிட முடியும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறைமையின்படி வெற்றிகரமாக எரிபொருள் விநியோகம் நடைபெற்ற போதிலும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 800 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே தொடர்ச்சியாக எரிபொருள் கிடைப்பதாக சங்கத்தின் செயலாளர் கபில நாதுன்ன குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு பெரும் பிரச்சினை
புதிய முறையின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக எரிபொருளை விடுவிப்பது இயலாது எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைப்படி அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ள போதிலும் எரிபொருள் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியன் ஓயில் நிறுவனத்தின் ஒவ்வொரு நிரப்பு நிலையமும் ஒரே நேரத்தில் 19,800 லீட்டர் எரிபொருளைப் பெறுகிறது, ஆனால் ஒரு சிபெட்கோ நிரப்பு நிலையம் ஒரு நேரத்தில் 6,600 லீட்டர் மட்டுமே பெறுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
