சஜித்தினால் நாடாளுமன்றத்தில் நெருக்கடிக்கு உள்ளாகிய கட்சித் தலைமைகள்!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தொடர்பில் எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி நிலையினை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கட்சித் தலைவர்கள் பலர் தமது உரைகளை நிராகரித்தும் உள்ளனர்.
அரச தலைவர் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில், அவருக்கான நேரமும் குறைக்கப்பட்டதால், ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சீற்றமடைந்திருந்தார்.
அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு 5 நிமிடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு 9 நிமிடங்களும், மக்கள் விடுதலை முன்னணயின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு 10 நிமிடங்களும் மட்டுமே வழங்கப்பட்டன.
இதனால் மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரையாற்றவில்லை. அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தனது நேரத்தை, தனது கட்சி உறுப்பினரான விஜித ஹேரத்திற்கு வழங்கியுள்ளார்.
இந்தக் குறுகிய நேரத்தில் எதனை பேசுவது என்று அவர்கள் கடிந்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விவாதத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலதிகமாக 27 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார்.
எதிரணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றியுள்ளார். இதனால் தங்களுக்கு உரிய நேரம் வழங்கவில்லை என எதிர்தரப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.