தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி! கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கம் அதிரடி
தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து, உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் ஆண்டு இறுதியில் வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனாவின் 3ஆவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், அதாவது 2 டோஸ் செலுத்திக்கொண்ட குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும் 3ஆவது டோஸ் ஒமைக்ரோனை கட்டுப்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அதே வேளையில் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அந்த நாடுகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் கனடாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு மருத்துவரி விதிக்க அங்குள்ள ஒரு மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கனடாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2ஆவது மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா உயிரிழப்புகள் அங்குதான் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அந்த மாகாண அரசாங்கம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாகாணத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளமால் உள்ளனர். அவர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு மாகாண அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ள மாகாண பிரதமர் பிராங்கோயிஸ் லெகால்ட் (Francois Legault) அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
தடுப்பூசியின் முதல் டோஸ் பெறாதவர்கள் வரி செலுத்த வேண்டும். கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சில தியாகங்களைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு இது நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.