மக்கள் மனங்களை வெல்லக்கூடிய கனவான்கள் ஜாம்பவான்களே வடக்கு, கிழக்கு ஆளுனர்களாக வேண்டும்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நீக்கி விட்டு மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் அதிபரால் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுநர்களையே அதிபர் நியமிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.
மக்கள் மனங்களை வெல்லாத ஆளுநர்கள்
தற்போது பதவி வகித்து கொண்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களால் மக்கள் மனங்களை வெல்லவே முடியவில்லை. அவர்களுடைய மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் உண்மையிலேயே போதாது.
மேலும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்கை பொறுத்த வரை ஆளுநர் அனுராதா ஜகம்பத் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்.
ரணிலுக்கு கோரிக்கை
இதனால் இவருக்கு கிழக்கு மண்ணின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இருப்பதாக இல்லை. மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கனவான் ஒருவரே கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்.
அவர் மக்கள் சேவையில் உச்சத்தை தொட்டவராக இருக்க வேண்டும். நிர்வாக செயற்பாடுகளில் ஜாம்பவானாகவும் இருக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
