யாழ். வடமராட்சி கிழக்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றிரவு இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கடற்பகுதி சீராக காணப்படுவதால் வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்கள் மீன்பிடி தொழிலுக்காக தற்போது கடலுக்குச் செல்கிறார்கள்.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களின் வலைகளை இந்திய இழுவைமடி படகுகள் அறுத்துச் செல்வதால் கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவான கடற்படை டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் தற்போது அந்த நடவடிக்கை குறைந்துள்ளதாகவும், இதனால் தமது கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் வளத்தை அழித்துச் செல்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கடல் நிலைமை தொடர்பில் கடல் தொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிப்படைந்த கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |