வடக்கிலுள்ள காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் காவல்துறையினர் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் புத்திக சிறிவர்தனவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (25) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி மோசடிகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது இதனைத் தடுப்பதற்குப் காவல்தறையினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்பாடின்றி இடம்பெற்று வருவதுடன், சில பகுதிகளுக்கு காவல்துறையினர் கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர், அப்பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அதிரடிப் படையினரின் உதவியைக் கோரியுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அவசியம் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் காவல்மா அதிபர், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்காக இங்கு சில வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்
இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஆவணங்களைப் பெறுவதற்காகவும் சிலர் திட்டமிட்டு இத்தகைய வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர் என்ற தகவளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாடசாலைச் சூழலில் மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் முகவர்களிடம் ஏமாறுவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணம் பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால் இடர் முகாமைத்துவப் பிரிவினருடன் இணைந்து இடர்தணிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் மாகாண நிர்வாகத்துக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சிரேஷ்ட பிரதிப் காவல்துறையினர்மா அதிபர் இதன்போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |