கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை
கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்போது, மாணவர்கள் கல்வி அனுமதிக்காக (Study Permit) விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி பெறுவதற்கான கட்டணம்
கல்வி அனுமதி பெறுவதற்கான கட்டணம் 150 கனேடிய டொலர் என IRCC குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் மாணவர்கள் பொறுப்பானவர்கள்; தவறான தகவல் வழங்கினால் விசா மறுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் வரை கனடாவிற்கு நுழைய தடை விதிக்கப்படலாம்.

மோசடி அறிகுறிகளில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஏற்பு கடிதம் (Letter of Acceptance) இல்லாமல் விண்ணப்பிக்கச் சொல்லுதல், பணம் கொடுத்தால் சேர்க்கை, scholarship அல்லது வேலை அனுமதி கிடைக்கும் என்று வாக்குறுதி, அனைத்து பாடப்பிரிவுகளும் Post-Graduation Work Permit பெறும் என தவறான தகவல், சமூக ஊடகங்கள் மூலம் ஆவணங்கள் அல்லது பணம் கேட்பது என சில விடயங்கள் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அறிவுறுத்தல்
இந்த நிலையில், IRCC, மாணவர்கள் அனுமதியில்லாத முகவர்களை பயன்படுத்தக்கூடாது, நேரடியாக கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உடனடியாக முறைப்பாடளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், சர்வதேச மாணவர்கள் வெற்று படிவங்களில் கையொப்பமிடாமல், அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, பணம் செலுத்திய ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |