யாழில் தமிழ்த்தேசியம் பேசியவர்களுக்கு பலத்த அடி: எக்காளமிடும் இளங்குமரன் எம்.பி
யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் போன்று உள்ளூராட்சி தேர்தலிலும் பலத்த அடி விழுந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilankumaran) தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றிராத ஒரு மகத்தான வெற்றியை தேசிய மக்கள் சக்தி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ”தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மீதான அலை ஆறே மாதங்களில் ஓய்ந்து விட்டதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி
தமது தோல்வியை மறைக்கவே அவர்கள் இவ்வாறான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். கடந்த கால அரசாங்கங்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் இவ்வளவு ஆசனங்களைப் பெற்றிருக்கவில்லை.
தமிழ் கட்சிகள் அஞ்சும் அளவிற்கு கடந்த அரசாங்கங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்தடம் பதிக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஒன்றே தமிழ் கட்சிகளுக்கு தோல்வி பயத்தைக் காட்டியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்கள் மனதில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் முதற் தடவையாக நாம் போட்டியிட்டோம்.
முதல் தடவையிலேயே 20 சதவிகிதமான ஆசனங்களைக் கைப்பற்றி தமிழ் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளோம். தமிழ் கட்சிகள் கடந்த காலத்தைப் போன்று தனி ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போகக் காரணம் எமது வெற்றி.
பிளவடைந்த தமிழ் கட்சிகள்
எமது ஆதிக்கம் காரணமாகவே கடந்த காலத்தில் சுயநலத்திற்காக பிளவடைந்த தமிழ் கட்சிகள் இன்று ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 இல் இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தேசிய கட்சிகள் வட்டாரத்தை வென்றது மிக அரிது.
ஆனால் நாம் நேரடியாக பல வட்டாரங்களை வென்றுள்ளோம். காலா காலமாக தேசியம் பேசி மக்களை ஏமாற்றியவர்களை தோற்கடித்துள்ளோம். எமது வேட்பாளர்கள் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்தவர்கள் அல்லர்.
அவர்கள் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால் நேர்மையானவர்கள். பெரும்பாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தோம். இந்த வெற்றி எமக்கு மிகப்பெரிய ஒரு வரலாற்று வெற்றி.
அதேநேரம் தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் போன்று இதுவும் ஒரு பலத்த அடி என்பதனை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.” என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
