யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..!
சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் காவல்நிலையத்திலேயே உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதி அநுர குமாரவின் வருகையையடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கைது நடவடிக்கை
இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, அவர் மணல் அகழ்வில் ஈடுபட்டபோது நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மணலை உழவு இயந்திர பெட்டியின் அடியில் ஏற்றிவிட்டு மேலே கட்டட இடிபாடுகளை ஏற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.
அதன்படி, ஊர்காவற்துறை காவல்துறையினரின் கீழ் இயங்கும் காரைநகர் காவல்துறை காவலரணில் கடமை புரியும் அதிகாரிகளாலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விசனம்
இந்த நிலையில், குறித்த தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நேற்றிரவு காவல் நிலையம் சென்று அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் காவல்துறையினர் விடுதலை செய்யவில்லை.பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்ற வகையில், இன்றையதினம் ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகையை முன்னிட்டு அவரை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த மாதிரியான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
