யாழ். பல்கலைக்கழக ஊழியர் நியமனங்களில் தலையீடு : ரஜீவன் எம்.பி விளக்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (UOJ) நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தலையிடுவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கல்வி அமைச்சின் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், உயர்கல்விக்கான உபகுழு உறுப்பினராகவும், மேலும் யாழ்ப்பாண மாவட்ட கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றேன்.
கல்விசாரா ஊழியர்கள் நடத்திய போராட்டம்
2025 செப்டம்பர் 12ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வி உபகுழு கூட்டத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் நியமனம் இதுவரை மேற்கொள்ளப்படாததற்கான காரணத்தைக் கேட்டேன்.
மேலும், அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்தேன்.
உடனடியாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் கல்வி அமைச்சு சாரா ஆலோசனைக்குழுவிற்கு ஒரு மோஷன் (Motion) எழுதியும் அனுப்பியிருந்தேன்.
பிரதி கல்வி அமைச்சர் உறுதி
உயர்கல்வி உபகுழுவின் தலைவர் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன என்னுடன் கலந்துரையாடி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான ஆளணி நியமனம் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.
எனவே, கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக மட்டுமே நான் செயற்பட்டு வருகிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

நான் ஒருபோதும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை. மேலும் எந்த நியமனங்களையும் யாருக்காக கோரியதுமில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது.
இச்செய்தி உண்மையை மறைத்து ஒரு பிழையை மூடிமறைக்க திட்டமிட்ட ஒரு குழுவினரால் பரப்பப்பட்ட தவறான தகவல் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |