வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்!
வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தாக்கல் செய்த ஐபிஎல் (ஐபிஎல்) தொடருக்கான தடை தொடர்பிலான மனுவுக்கு எதிராகத் தமது ஆட்சேபனையை முன்வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிற வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்பதற்கான தடை இல்லாச் சான்றிதழை (NOC) வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு (SLC) உத்தரவிடக் கோரி வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது துஷாரவின் கோரிக்கைக்கு எதிராகத் தங்களது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
முக்கிய அதிகாரிகள்
இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 23 ஆம் திகதிக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரதிநிதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தடையின்றி ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள துஷார, 2026 ஆம் ஆண்டு தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இருப்பினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உடற்தகுதித் தரநிலைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுக்கான NOC வழங்க கிரிக்கெட் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.
வருமான இழப்பு
தனது தரப்புக்களை முன்வைத்துள்ள துஷார, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் இனி தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட மாட்டேன் எனத் தெரிந்திருந்தும், உடற்தகுதியைக் காரணம் காட்டித் தடையுத்தரவு பிறப்பிப்பது நியாயமற்றது என அவர் வாதிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த காலங்களில் இதே உடற்தகுதியுடன் தனக்கு NOC வழங்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த காலப்பகுதிக்குள் NOC வழங்கப்படாவிட்டால் ஐபிஎல் அணி தன்னை நீக்கிவிடும் என்றும் இதனால் தனக்குப் பாரிய வருமான இழப்பு எதிர்கால வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படும் எனத் துஷார கவலை வெளியிட்டுள்ளார்.
தனக்கு NOC வழங்கப்பட வேண்டும் என்ற இடைக்கால மற்றும் நிரந்தர தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரியுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணை இந்த விவகாரத்தில் தீர்க்கமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |