கொழும்பில் வீடுகளை பெற்ற எம்.பிக்கள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த தகவல்
தமக்கு வழங்கப்பட்ட வீடுகளில் 60 ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பதில்லை என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோட்டை – மாதிவெல பகுதியில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே இவர்கள் குடியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வழங்கப்பட்ட வீடுகளை இவர்கள் தமக்கு பாதுகாப்பு வழங்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களைப் பார்க்காதவர்களும் உண்டு என நாடாளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிகாரபூர்வ குடியிருப்புகளையும் கொடுத்துள்ளனர்.
மாதிவெலவில் உள்ள உத்தியோகபூர்வ குடியிருப்புக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதம்தோறும் சுமார் 1,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வீடுகளை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த வீடுகளைப் பெற்று உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிறருக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன்படி, வீட்டுத் திட்டத்தில் வீடுகளைப் பெற்ற எம்.பிக்களின் பட்டியலை உடனடியாக அனுப்புமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.