அரசாங்கத்தினால் பல அபிவிருத்தி திட்டங்கள் - இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர
கப்பல் நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
களஞ்சிய வசதிகள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera) தலைமையில் இந்நிகழ்வு இன்று திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்றது.
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் கொழும்பு டொக்யாட் நிறுவனம் இயங்கி வந்ததுடன், அதன் கிளைக்காரியாலயம் திருகோணமலை அஸ்ரப் (Ashraf)துறைமுகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கப்பலில் ஏற்படுகின்ற கோளாறுகளை சரி செய்வதற்காக திருகோணமலையில் திருத்தப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் கொழும்பு டொக்யாட் நிறுவனத்தினால் கிளை திறக்கப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயலாளர் டீ.டீ.மாதராரச்சி தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு கடற்பரப்பில் பல கப்பல்களை நிறுத்தி வைக்க கூடிய வசதிகள் காணப்படுவதாகவும், அரசாங்கத்தினால் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
மேலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் சீன உரக்கப்பலானது திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் தென்படுவதாக தெரிவித்த கருத்தை தாம் ஆமோதிப்பதாகவும் அவர் கூறினார்.